இந்திய- இலங்கை கடற்றொழிலாளர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்..!
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய கடற்றொழிலாளர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு
ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய கடற்றொழிலாளர்கள் இரண்டு, மூன்று
பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக
தென்படவில்லை.
எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது, யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
எல்லை மீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லை மீறும் இந்திய கடற்றொழிலாளர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கடல் எல்லையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்தாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஏக மனதாக தீர்மானித்துள்ளது.
எல்லை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை கோரும் இந்திய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
சில இந்திய அரசியல் தரப்புகள் எமது அரசாங்கத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமான செயற்பாடாக தென்படவில்லை. இதுபோல செயற்பாடுகள் இங்கு இடம்பெறுமானால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே போய்க்கொண்டிருக்கும் என்பதை எமது இலங்கை அரசாங்கமும் கணக்கில் எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்றொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இலங்கை கடற்படை மற்றும் நீதித்துறைக்கு காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |