டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா
இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500 லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வானது நேற்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.
இந்திய நிறுவனமான UPL Limited
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் வழங்கிய அன்பளிப்பாக இந்த மருந்து இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனமான UPL Limited இந்த மருந்தை வழங்கியதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளது.

நெருக்கடி காலங்களில் முதன்முதலில் உதவி வழங்கும் நாடாக இந்தியா தொடர்ந்து செயல்படுவதை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் சுமார் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.
தொழில்நுட்ப மலத்தியோன்
இந்த தொழில்நுட்ப மலத்தியோன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பரவலான புகைமூட்டல் (Fogging) மற்றும் தெளிப்பு (Spraying) நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும்.
நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த மருந்துத் தொகுதியை விரைவாக வழங்குவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய இலங்கை சுகாதார அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் "Neighbourhood First" (அயல்நாடுகள் முதன்மை) கொள்கையின் கீழ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவை இது பிரதிபலிக்கிறது.

