அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கும் இந்தியா
அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதால் இந்தியாவிற்கு பிராந்தியளவில் பிரச்சினை எழக்கூடும் எனவும் இதனால் இலங்கைக்கு ஆணையிடுவதை இந்தியா தவிர்த்து வருவதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில், அண்மையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வந்தடைந்த பொழுது அதனை நிறுத்துமாறு உத்தரவிடாமல், இந்தியா தமது பாதுகாப்பு குறித்து கவலையை இலங்கையிடம் தெரிவித்தமை இதற்கு உதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சீன கப்பல் விவகாரம்
மேலும், இலங்கைக்கு மீண்டும் மீண்டும் கட்டளையிடுவது இருதரப்பு உறவுகள் மோசமடைவதற்கும் இந்திய எதிர்ப்பு உணர்வை அதிகரிப்பதற்கும் வழியை ஏற்படுத்தும்.
அத்துடன் சீனாவுக்கு ஆதரவான சாய்வுக்கும் இது வழிவகுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவைப் பொறுத்தவரை, பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை நிலைநிறுத்துவது சிக்கலான விடயமாக மாறிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் சீன உளவுக் கப்பலான 'யுவாங் வாங்-5' வருகை தந்த வேளையில் இந்தியா, இலங்கைக்கு டொர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியமை சிறந்த இராஜதந்திர நகர்வாகும்.
மேலும் காத்திருப்பு, கண்காணிப்பு மற்றும் தீவிர ஈடுபாடு ஆகியவற்றின் இந்தியாவின் கொள்கை சமீபத்திய ஆண்டுகளில் மாலைத்தீவுகள் மற்றும் சீஷெல்ஸில் பலனளித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, சீன நலன்களைப் புறக்கணிப்பது சீனாவின் இலாபகரமான உதவியின் வலையில் இருக்கும் நாடுகளுக்கு எப்போதும் எளிதாக இருக்காது. இலங்கையின் மக்களும் அரசாங்கமும், பொருளாதார உதவி அல்லது கடன்களின் அர்த்தத்தை வேறுபடுத்துவதில் தவறிழைக்கின்றனர்.
இலங்கைக்கு இந்தியா கடனுதவி
சீனாவின் கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சீனாவின் விருப்பத்திற்கு இணங்க
வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களுக்கு மேல்
இந்தியா உடனடியாக ஆதரவளித்தும் கூட, பிராந்தியத்தில் சீனா-இலங்கை-இந்தியா ஆகிய
சமன்பாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இலங்கையின் நெருக்கடி நிலைமை
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அதில் இருந்து வெளியேறுவது மற்றும் கடன் மறுசீரமைப்பு பிரச்சினையை அதன் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றான சீனாவின் உதவியின்றி தீர்க்க முடியாது என்பதை இலங்கை உணர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் திக்கற்ற நிலையில் உள்ள இலங்கை, இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் சமாளித்துச் செல்லும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
இந்தியாவின் அதிருப்திக்கு இணங்க, சீன கப்பலை தாமதிக்க வைத்தமை, பின்னர் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதித்து அதற்கு வரவேற்பளித்தமை என்பன இலங்கையின் சமாளிக்கும் அணுகுமுறையை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.