இலங்கையின் இராஜதந்திர வெற்றி: இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் சம்மதம்
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பலனாக, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலான தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், பாகிஸ்தான் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விடைபெற்றார்.இதன்போதே இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கருத்து வேறுபாடுகள்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் முன்னதாக எடுத்திருந்த முடிவை தற்போது கைவிட்டுள்ளது.

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாள் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த இராஜதந்திரச் சிக்கலைத் தீர்ப்பதில் இலங்கை ஆற்றிய ஆக்கபூர்வமான மத்தியஸ்தப் பணிகளைத் தூதுவர் வெகுவாகப் பாராட்டினார்.
குறிப்பாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்க்க அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அமைச்சரின் இராஜதந்திரக் கோரிக்கை
அமைச்சரின் இராஜதந்திரக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தூதுவர் வழங்கிய உடனடி மற்றும் நேர்மறையான பதிலுக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையிலான தனது பதவிக்காலம் மகிழ்ச்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்ட தூதுவர், இதற்கு வெளிவிவகார அமைச்சு வழங்கிய முழுமையான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.
மேலும், தனது பதவிக்காலத்தில் 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் இரு ஜனநாயகத் தேர்தல்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.