இந்தியாவில் வன்முறையாக மாறியுள்ள ஹிஜாப் சர்ச்சை! (Video)
கர்நாடகாவின் உடுப்பியில் நடந்த ஒரு பிரச்சினை இன்று உலகளவில் எதிரொலித்து கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் கடலோர கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பருதா, புர்கா போன்ற இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த வாரத்தில் மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் 6ம் நாளாக நேற்றும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து 'ஜெய் பீம்'என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்த போராட்டம் நேற்று பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது.
ஷிமோகாவில் உள்ள பாபுஜி நகரில் ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் முஸ்லிம் மாணவிகளை சூற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பினர்.
மேலும் தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை கட்டியதால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ அமைப்பினர் கல்வீச்சிலும் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
இதனால் பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவலை இக் காணொளியில் காணலாம்,