வடமேற்கு காற்றாலையில் ஆர்வம் காட்டும் இந்தியா!
நாட்டின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“பல இந்திய நிறுவனங்கள் இந்த திட்டங்களில் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும் அந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பது நன்கு அறியப்பட்டதாகும்.
இந்தநிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது இந்திய மற்றும் இலங்கை வெளிநாட்டு உறவுகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் ஒரு பகுதியாகும், என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதை இலங்கை அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியல் சர்ச்சைகள்
சமீபத்தில், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் இந்தியா கணிசமான ஆர்வம் காட்டியபோதும், பெரும்பாலான திட்டங்கள் அரசியல் சர்ச்சைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களில் சிக்கியுள்ளன.
முன்னதாக 2021 இல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன், நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவில் சீன நிறுவனம் ஒன்றுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இலங்கை வழங்கியது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பால் அதனை இலங்கை அரசாங்கம் பின்னர் திரும்பப்பெற்றுக்கொண்டது.