இலங்கை கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் மனித உரிமை மீறிய செயல் - இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்
இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் இந்தியாவில் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் செயல் என்பதுடன் அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது உலக நாடுகள் அனைத்தினதும் அடிப்படை பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான கடற்றொழில் ஈடுபட்டு வரும் இந்தியர்கள்
மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்றொழிலாளர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய கடற்றொழிலாளர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளனர்.
அவ்வாறிருக்கையில் கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான கடற்றொழில் முறைகள் கடல் சூழலுக்கும் கடல் வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த முறையற்ற செயலினால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், கடற்றொழில்துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்