ட்ரம்பின் திடீர் தீர்மானம்.. ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் வல்லரசுக்கள்
அமெரிக்கா, தடைகளை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரான் எண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக உருவான எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா தற்காலிகமாக தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீண்டும் ஈரான் எண்ணெய் வாங்கத் தயாராக உள்ளதாக வர்த்தகர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தியாவின் மூன்று சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஈரான் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான அரசாங்க வழிகாட்டுதலையும், கட்டண விதிமுறைகள் போன்ற விபரங்களில் அமெரிக்காவின் தெளிவையும் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி
தற்காலிக தடைகள்
மற்ற பெரிய ஆசிய நாடுகளை விட குறைந்த அளவிலான மூல எண்ணெய் கையிருப்பைக் கொண்டுள்ள இந்தியா, சமீபத்தில் அமெரிக்கா தற்காலிகமாக தடைகளை தளர்த்தியதைத் தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை விரைவாக முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஆசியாவின் பிற சுத்திகரிப்பு நிறுவனங்களும் ஈரான் எண்ணெயை வாங்கும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட் கூறுகையில், கடலில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள ஈரான் எண்ணெய் கொள்முதல் செய்ய 30 நாட்கள் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தளர்வு, மார்ச் 20 அல்லது அதற்கு முன் கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெய்க்கும், ஏப்ரல் 19க்குள் இறக்கப்படும் சரக்குகளுக்கும் பொருந்தும் என வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) தெரிவித்துள்ளது.
போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்கா எண்ணெய் தொடர்பான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைகிறது. கடலில் சுமார் 130 முதல் 170 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான ஈரான் மூல எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியிலிருந்து சீனாவை அண்மித்த கடல் பகுதிகள்வரை பரவி உள்ளன.
ஹோர்முஸ் நீரிணை
ஆசியா தனது மூல எண்ணெய் தேவையின் சுமார் 60 வீதத்தை மத்திய கிழக்கிலிருந்து பெற்றுக்கொள்வதால், இந்த மாதம் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதற்கான அச்சுறுத்தல் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை குறைத்து எரிபொருள் ஏற்றுமதியையும் சுருக்கியுள்ளன.

2018ஆம் ஆண்டு அணு திட்டம் தொடர்பாக அமெரிக்கா ஈரானுக்கு மீண்டும் தடைகள் விதித்ததைத் தொடர்ந்து, சீனா அதன் முக்கிய வாடிக்கையாளராக மாறியது.
கடந்த ஆண்டு சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1.38 மில்லியன் பீப்பாய்கள் ஈரான் எண்ணெய் வாங்கியதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், கட்டண முறைகள் குறித்த தெளிவின்மை மற்றும் பழமையான ‘ஷாடோ’ கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு செல்லப்படுவது போன்ற சிக்கல்கள், ஈரான் எண்ணெய் கொள்முதல் செயல்முறையை சிரமப்படுத்தக்கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில நாடுகள் முன்பு தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் வாங்கியிருந்த போதிலும், 2018க்குப் பிறகு பெரும்பாலான விற்பனைகள் மூன்றாம் தரப்பு வர்த்தகர்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam