இந்திய இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகளை மறுக்கும் இந்தியா
இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள சில ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகளை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊடக செய்திகள் வெறும் வதந்திகள்
இந்த செய்திகளில் உள்ள கருத்துக்கள் நிலைப்பாடுகள் இந்தியாவின் நிலைப்பாடுகள் அல்ல எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்திகள் எனவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இந்தியா எப்போதும் சௌபாக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்பு ஜனநாயக வழியில் தமது அபிலாஷைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இருக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெளிவாக கூறியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியம் சுவாமியின் வலியுறுத்தல்
அதேவேளை ராஜபக்சவினருக்கு இந்திய இராணுவத்தின் உதவிகள் தேவைப்பட்டால், இந்தியா அதனை வழங்க வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதில் மேலும், கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள் எனவும் அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும் எனவும் அப்படி நடக்குமானால் எமக்கு அயலில் எந்த ஜனநாயக நாடும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.