வவுனியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வைத்து மயங்கி விழுந்த மாணவர்கள்
வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 4 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 76வது சுதந்திர தின விழா வவுனியா மாவட்டத்தில் இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரதம அதிதி
இந்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணித்தியாலமாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்.வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் முதலுதவி வழங்கியுள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்ற சுதந்திர தின நிகழ்வின் போது வெப்ப தாக்கத்தினால் மாணவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மயங்கி விழுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இனிவரும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிவகுப்பு வகுப்பு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற அனுமதிப்பது அல்லது மாற்று வழிகளில் செல்வது நல்லது.
இவை தொடர்பில் உரிய அதிகாரிகளை கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






