அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்
அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் உள், வெளித் தொழிலாளர் இடம்பெயர்வு காரணமாக இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் சேர்க்க முற்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் தோட்டப் பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை தற்போது உள்ளது.
அடிப்படைத் தேவைகள்
2023ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் குழந்தைகள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்த வருமான பாதுகாப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால், குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது உணவு உற்பத்தியில் 40 சதவீதம் குறைவானது என்ற கணிப்பீட்டின் மூலம், அக்டோபர் 2022 முதல் பெப்ரவரி 2023 வரை உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடையக்கூடும்.
இதனை சமாளிப்பதற்கான உத்தியாக 5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவைத்
தவிர்த்துக் கொண்டிருந்தாலும், இயற்கை ஆபத்துகள் மற்றும் அரசியல் முட்டுக்கட்டை
ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்துடன் வரும் மாதங்களில் பாதிக்கப்படும்
மக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்றும் யூனிசெஃப் கூறியுள்ளது.