மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு: இருவர் உயிரிழப்பு (Photos)
மட்டக்களப்பு - மண்முனை பகுதியில் இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் சுமார் 240க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு சிரமதான மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு, சிரமதான, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோய் தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவின் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விசேட விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் பிராந்திய தொற்றுநோயியல் பிரிவு வைத்தியர் குணராஜா சேகரம், மேற்பார்வை உத்தியோகத்தர் வி.விஜேகுமார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ், உத்தியோகத்தர்கள் , முப்படையினர் இணைந்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.