வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு!
அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் இவ்வாறு அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு வற் (VAT) வரி அறவிடப்படுவதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொட தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு
தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்த, ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது.
இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு கூட புத்தகம் வாங்க முடியாத நிலை ஏற்படும். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு வற் (VAT) வரி அறவிடப்படுகின்றது.''என கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,''ஒரு புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் வற் வரி விகிதம் 15 சதவீதமாக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு வற் வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 - 18 சதவீதமாக அறவிடப்பட்டது. அத்துடன் எழுதுபொருட்களுக்கு 3 சதவீதமாக மட்டுமே இருந்தது. அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் வற் வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.''என கூறியுள்ளார்.