சிகரெட்டுக்கான வரியை அதிகரியுங்கள் - செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிரதமருக்கு கடிதம்
அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam adaikalanathan) பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இன்று (28) அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது.
ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20இனால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனைப் பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகிக் காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும்.
இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையைக் குறைப்பதானது கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் எனத் தீர்க்கமாக நான் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.