தமிழர்களை கோபப்படுத்தி வீதிக்கு இறங்க வைக்கும் நிகழ்வே சுதந்திர தின நிகழ்வு- அருட்தந்தை மா.சத்திவேல்
தமிழர்களை கோபப்படுத்தி வீதிக்கு இறங்க வைக்கும் நிகழ்வே வடக்கில் நடத்தவிருக்கும் சுதந்திர தின நிகழ்வு என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (25.01.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர்கள் சுதந்திரத்தை அனுபவித்ததாக வரலாறு இல்லை.
மலையக தமிழர்களும் இன அழிப்பிற்குள்ளாகி வருகின்றனர்
குறிப்பாக பிரித்தானியிடமிருந்து ஆட்சி கைமாறியதை தொடர்ந்து அரச பயங்கரவாதத்தின் வன்முறைகளுக்கும், இனவாத தாக்குதர்களுக்கும், அரசியல் நீதி மதிப்பிற்கும், முகம் கொடுத்தவர்கள் தொடர இன அழிப்பிற்கும் முகம் கொடுத்து திட்டமிட்ட இனப்படுகொலையும் அனுபவித்து தொடர்ந்து பல்வேறு முகங்களில் நடக்கும் இன அழிப்பையும் சந்தித்து வருகின்றனர்.
வட கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களும் அதனால் பாதிப்புற்று அவலங்களை சந்தித்துள்ளதோடு மலையக தமிழர்களும் சலனமற்ற இன அழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கின் யாழ்ப்பாணத்தில் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த அரசு தரப்பினர் திட்டமிடுவதும், அதுவும் சிங்கள பௌத்தத்தை முன் நிறுத்தி நடத்த முனைவதும் பேரினவாத ஆதிக்க மனப்பான்மையை மட்டும் அல்ல தமிழர்களை புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதுமாகும் இதனை வன்மையாக எதிர்ப்பதோடு இது நிறுத்தப்பட வேண்டும்.
இல்லை எனில் பாரிய மக்கள் எதிர்ப்பையும் வீதி
போராட்டங்களையும் சந்திக்க வேண்டி ஏற்படும்.
1970 க்கு பின்னரான காலகட்டங்களில் சுதந்திர தினத்திற்கு எதிராகவும், தேசிய
கொடிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியே
வந்துள்ளனர்.
இன அழிவிற்கு முகம் கொடுத்த தமிழ் சமூகம் தெற்கின் ஆட்சியின் கீழ் சிங்களக் கொடியாகிய சிங்கக் கொடியின் கீழ் நசிந்து வாழ முடியாது "தனித்தமிழ் ஈழமே தமிழரின் தாகம்" எனப் போராட்டத்தை ஆரம்பித்து சுதந்திர அரசாங்கத்தை கட்டி எழுப்பி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளி காட்டியது வரலாறு.
75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
அதனை பாரிய யுத்த ஆயுதங்களினாலும் குண்டுகளினாலும் தாக்கி அழித்து இலட்சத்துக்கு மேற்பட்டோரை கொன்று குவித்ததோடு பலநூற்றுக்கணக்கானோரை ஊனர்கள் ஆக்கி விதவைகளாக்கி, வளங்களை சூரையாடி வறுமைக்குள் தள்ளியது மட்டுமல்ல தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராணுவம் இன்றும் நம்முடைய கையிலே வைத்துள்ளது.
அந்நிலங்களில் தமிழர்கள் விரும்பாத சிங்கக் கொடியை ஏற்றி வைத்துள்ளது. அது மட்டுமல்ல யுத்த குற்றங்களுக்கு நீதி கேட்டும் அது இதுவரை கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இவற்றை எல்லாம் செய்தவர்கள் தமிழர் தாயகத்தில் சுதந்திர விழா எடுப்பதா? தமிழர்களை அழிக்க பயன்படுத்திய யுத்த ஆயுத தல படங்களை காட்சிப்படுத்துவதையும், யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு கௌரவப்பட்டங்களை சுதந்திர தினத்தன்று கொடுப்பதையும் தமிழர்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் 2009 ஆம் ஆண்டு தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தமிழர் தாயகத்தில் கறுப்புக்கொடி போராட்டமே தொடர்கின்ற நிலையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசு முற்படுவது தேசியக் கொடி என சிங்கக் கொடியை ஏற்ற நினைப்பது பௌத்த சிங்கள பேரினவாதம் நாடு முழுவதும் எமக்கே சொந்தம் எனக் கூறுகின்ற ஈனச் செயலாகும்.
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழர்களை மீண்டும் மீண்டும் புண்படுத்தும் அரச செயற்பாட்டினை நிறுத்த வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை தந்த போது பாரிய எதிர்ப்பு போராட்டம் நிகழ்த்திய போது பாதுகாப்பு தரப்பினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக அடாவடித்தனம் புரிந்ததோடு நீர் தாகை செய்த போது அதனை போராட்டக்காரர்கள் கேளிக்கை நிகழ்வாக்கி தனது எதிர்ப்பை வெளிகாட்டினர்.
மக்களின் எதிர்பார்ப்பு
இது நடந்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் மீண்டும் தமிழர்களை கோபப்படுத்தி வீதிக்கு இறங்க வைக்கும் நிகழ்வே வடக்கில் நடத்தவிருக்கும் சுதந்திர தின நிகழ்வாகும். வடகிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தற்போதே தெற்கின் மக்கள் தமக்கு சுதந்திரம் இல்லை என உணரத் தொடங்கியுள்ளயுள்னர்.
அது மட்டுமல்ல அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தெற்கின் மக்கள் தமிழர்களின் சுதந்திர அரசியல் தாகத்தை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்கி அரசியல் தீர்வுக்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சுதந்திரத்தின் 100 ஆண்டு கொண்டாட முடியும். அதற்கு 25 ஆண்டுகள் எனும் குறுகிய காலமே உள்ளது.
அந் நாள் கரி நாளாக இருக்க வேண்டுமா? அல்லது வசந்தத்தின் நாளாக இருக்க வேண்டுமா? என்பதை தெற்கின் மக்களே தீர்மானிக்க வேண்டும். மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் அறிவித்திருக்கும் கால கட்டத்தில் அது நடக்குமோ? நடக்காதோ? தெரியாது.
வடகிழக்கு கட்சிகள் தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டு மக்களோடு நிற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அரச
சுகபோகங்களுக்கு மயங்கி சுதந்திரம் என தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் அரசியல்
தீர்வு கிட்டும் என நாடகமாடி மக்களை ஏமாற்றவும் நினைத்தால் தமிழர்கள் ஜனநாயக
ரீதியில் நல்ல படிப்பினையை கொடுப்பதோடு நிரந்தர அரசியல் ஓய்வையும் கொடுக்க
தயங்க மாட்டார்கள் என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து நடத்தல் வேண்டும்.