சேதனப் பசளையால் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலை
போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலைமை தொடர்பாக அந்த நிறுவனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் விநியோகஸ்தர்கள் ஊடாக வெளிநாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 500 மெற்றி தொன் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சோளத்திற்கு தேவையான இரசாயன பசளை மற்றும் கிருமி நாசனிகள் கிடைக்காத காரணத்தினால், இம்முறை பெரும் போகத்தின் போது சோள அறுவடை பெருமளவில் குறைந்துள்ளது.
சோள பயிருக்கு சேதனப் பசளைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும் போதிய அறுவடை கிடைக்கவில்லை என உழவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் அடுத்த சில வாரங்களுக்கு திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன. திரிபோஷா என்ற போஷாக்கு உணவு கர்ப்பிணி தாய்மார் மற்றும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுகின்றது.