மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 461 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைவாக முதல் கட்டமாக 7 கோவிட் தொற்றாளர்களும், நேற்று 15 தொற்றாளர்களுமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் தலைமன்னார் பியர், மன்னார் பள்ளிமுனை மற்றும் மன்னார் நகர பஸார் நிலைய பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 370 தொற்றாளர்களும், மொத்தமாக மன்னர் மாவட்டத்தில் இதுவரை 387 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் நகரத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்றவர்களும், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் உரிய முறையில் கோவிட் தடுப்பு நடை முறைகளையும், சுகாதார நடை முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
உரிய முறையில் கோவிட் தடுப்பு நடை முறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள், நிறுவனங்கள் மீது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக உணவு கையாளும் நிலையங்கள், உணவு உட்கொள்ளும் இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தவிர அதிக எண்ணிக்கையில் மக்களை உணவகங்கள், கடைகளினுள் வைத்திருக்கின்றமை பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
மேலும் நேற்று 150 பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் முல்லேரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இரணை தீவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர்.பரிசோதனைக்கான அறிக்கையும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடை முறைகளைக்
கடைப்பிடித்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு
கேட்டுக்கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.