மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை: மண்சரிவு அபாய எச்சரிக்கை! (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன்- கொழும்பு, ஹட்டன்- நுவரெலியா மற்றும் ஹட்டன்- பொகவந்தலா உள்ளிட்ட பல வீதிகளில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்த இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்றி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றது.
மின்சாரதுறையின் வேண்டுகோள்
இதனை தொடர்ந்து நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கன்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாய்ந்து வருகின்றது.
எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரதுறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களில் வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதே நேரம் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுகின்றன.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
குறிப்பாக கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை,வட்டவளை, ஹட்டன், குடாகம, கொட்டகலை,சென்கிளையார் தலவாக்கலை,ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவுவதாக வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கினை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி சற்று வீழ்ச்சி கண்டுள்ளன. இன்றைய தினம் சீரற்ற காலநிலை காரணமாக தொழிலாளர்களின் வருகையும் மிக குறைவாக காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.