மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை! பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடும் மழை காரணமாக மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
ஐயங்கேணி, விபுலானந்தபுரம், பாரதிபுரம், ரட்ணாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமங்களின் வீதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளமையால் மக்கள் வீதிப்போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வீடுகளின் உள்ளும் வெள்ள நீர் சென்றிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இதேபோன்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி கிராம மக்களும் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலம்பாவெளி – விநாயகர் புரம் மற்றும் விபுலானந்தபுரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமங்களின் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளமையால் மக்கள் வீதிப்போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். வீடுகளின் உள்ளும் வெள்ள நீர் சென்றிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மட்டக்களப்பு நகரில் பெய்த கடும் மழை காரணமாக சில பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் காணமுடிந்தது.
பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாடசாலைக்கு வந்துசென்றதைக் காணமுடிந்தது.
அத்துடன் வீதிகள் பல வெள்ள நீரில் மூழ்கியதன் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் மத்தியில் போக்குவரத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.





