பெரும்பான்மை அரசின் மாற்றத்திற்கான நடவடிக்கை! சபையில் இம்ரான் எம்.பி ஆதங்கம்
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பேசிய தரப்பினர்கள் இன்று 159 பெரும்பான்மை பலத்துடன் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பது கேள்விக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி தற்போதைய அரசாங்க தரப்பால் பிரதானமாக பேசப்பட்டது. இந்த தாக்குதலால் அரசியல் மாற்றம் மாத்திரமல்ல, சமூக கட்டமைப்பிலும், இனங்களுக்கிடையில் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார்.
ஆகவே குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அனைவரும் சுதந்திரம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கிறார்களா? சுதந்திரத்துக்கு தடையாக காணப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆராய வேண்டும்.
புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி கடந்த காலங்களில் குறிப்பிட்டார். நடைமுறை அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், அமைச்சரவையின் அதிகாரங்கள் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அமைச்சர்கள்
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக பேசப்படுகின்றன.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவு வழங்குவதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், கோழிகளுக்கு அரிசி தீவனமாக வழங்குவதால் முட்டையின் கரு வெள்ளை நிறமாக மாறியுள்ளதாகவும் அரசாங்க தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
மாறுப்பட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன.ஆனால் தீர்வு முன்வைக்கப்படவில்லை. மறுபுறம் தேங்காய் சம்பலுக்கும், தேங்காய் பால் எடுப்பதற்கும் தேங்காய்கள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்களுக்கு ஏதாவதொன்றை குறிப்பிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறிப்பிடுகிறார்களா? அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்பது தெரியவில்லை” என்றார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |