துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா? இம்ரான் கேள்வி
கோவிட் தொற்று அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று காலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பல முதன்மையான பிரச்சினைகள் உள்ள நிலையில் ராஜபக்ஷ அரசு இந்த வாரத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன.
கோவிட் அபாயம் இன்று நாட்டில் தலைவிரித்தாடுகின்றது. அதனை ஒழிக்க இருந்த சந்தர்ப்பத்தை தனது செயற்பாட்டால் இந்த அரசு உதாசீனம் செய்தது.
இனவாத அரசியலுக்கு தீனி போட்டு சமூகத்தில் கோவிட் வளர களம் அமைத்துக் கொடுத்தது. கடைசியில் தன்னை நம்பிய 69 இலட்சம் பேரை மட்டுமன்றி முழு நாட்டையும் மரண பீதியில் வைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எத்தனிக்கிறது.
20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களுக்கு இப்தாரில் இதுபற்றி பேசப்பட்டதாக கதைகள் வருகின்றன. அவர்களது ஆதரவும் இதற்கு கிடைக்க கூடும்.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளை பெறவே இவ்வாறு கைதூக்கினோம் என்று நாளை அவர்கள் கூறினாலும் ஆச்சர்யமில்லை.
நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களோடு தொடர்பு பட்ட இந்த சட்டமூலம் பலத்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றுள்ள நிலையில் சீனாவின் அழுத்தம் காரணமாகவா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட போகின்றது என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
இந்த அரசாங்கத்தில் அரிசி உட்பட உணவுப்பொருட்களுக்குப் போன விலையேற்றத்தைப் பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.