பாகிஸ்தானில் இடைத் தேர்தல்: 33 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டி
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 33 தொகுதிகளிலும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை (27.01.23) அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறித்த இடைத்தேர்தல், பஞ்சாப் மாகாணத்தில் 12, கைபர் பக்துன்க்காவில் 8, இஸ்லாமாபாத்தில் 3, சிந்து மாகாணத்தில் 9, பலுசிஸ்தானில் 1 என மொத்தம் 33 தொகுதிகளுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் போட்டி
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்முத் குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மார்ச் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.
இதில், 33 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை மீளப் பெற்றுக் கொண்டது.
இம்ரான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதனைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. மேலும், இம்ரான் கான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி விலகினர். அதனை பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார்.
அவர்கள் தங்களது சொந்த விருப்பப்படி பதவிவிலகுகிறார்களா? என்பதை தனித்தனியாக சரிபார்க்க வேண்டும் என கூறினார். பின்னர் கடந்த மாதம் 35 பேரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.