அதிகாரப்பகிர்வு என்பது இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் சாத்தியமற்றது: சிவஞானம் சிறீதரன் (Photos)
அதிகாரப்பகிர்வு என்பது இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் சாத்தியமற்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்தை நேற்றைய தினம் (19.02.2023) சிவஞானம் சிறீதரன் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக இந்தியாவிற்கு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாக அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது குறித்து சிறீதரன் கூறியதாவது, 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள 30 விடயங்கள் தற்போது நீதிமன்றம் ஊடாக நீக்கப்பட்டுள்ளது. இப்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி இவ்வாறு கூறுவார். பிறகு நீதிமன்றங்கள் ஊடாக வழக்குகள் தொடுத்து எல்லாவற்றையும் அவர்கள் மீளப் பெற்றுக் கொள்வார்கள்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் விளைவால் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாகிறது.
சர்வதேச ஒப்பந்தத்தை இலங்கை அரசுகள் நீதிமன்றம் ஊடாகப் பறித்திருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு
இந்தியாவில் உள்ள இனங்களை அடிப்படையாகக் கொண்டு பகிரப்பட்டுள்ள முறைமை போன்று இலங்கையிலும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாகவும் தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் உண்மை நண்பர்கள் ஈழத்தமிழர்கள் தான். ஈழத்தமிழர்களின்
பாதுகாப்பு தான் இந்தியாவின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் எனவும்
சிவஞானம் சிறீதரன் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.