வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பான கட்டாய நிபந்தனையை நீக்க அமைச்சரவை அனுமதி
வீட்டு பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குடும்பப் பின்னணி அறிக்கை
இவ்வாறான பெண்களுக்கு ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் குடும்பப் பின்னணி அறிக்கையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் பெண்கள் உரிமைகளை பாதிப்பதாக பல மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்தன.
வெளிநாடு செல்வதற்கான தகுதிகளை கொண்டிருந்தும் குறித்த குடும்ப பின்னணி அறிக்கைகளால் பல பெண்களால் வெளிநாடு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வெளிநாடு செல்லும் தகுதிகளை கொண்டிராத சில பெண்கள், போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
கட்டாய நிபந்தனை நீக்கம்
இதனைக் கருத்திற்கொண்டு, 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளையுடைய பிள்ளைகளை கொண்டிருக்கும் பெண்கள், வெளிநாடு செல்லும்போது குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாய நிபந்தனையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.