200க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ஈஸ்டர் தாக்குதல்! - பிரதான சூத்திரதாரி குறித்து வெளியான தகவல்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியொருவர் இருக்கின்றார் என அரச புலானய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மொஹமட் ஹாபீஸ் மாஷா தெரிவித்துள்ளார்.
யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கெண்டிருக்க சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தலைவர் ஒருவர் நிச்சயமாக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் ஒருவர் இல்லாமல் கடும்போக்குவாத அமைப்பு ஒன்றை வழிநடத்திட முடியாது. இந்த தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும், கடந்த அரசாங்கமும் முனைப்பு காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கும்போது நம்பகரமான தகவல்களா என்பதனை ஆய்ந்தறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டுமெனவும் அவ்வாறு இருந்திருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.