கொழும்பில் அவசரமாக கூடிய தமிழ் கட்சிகள்:எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்(Video)
தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பேச்சுக்கான அழைப்பிற்கு தமிழ்த் தரப்பு பின்வரும் வகையில் பதில் வழங்குவதாகவும் இதன் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீர்மானங்கள்
1.நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
2. அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும்.
3. உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இணக்கப்பாடு
இக் கலந்துரையாடலில் கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் இம்முடிவுகளை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.