ஸ்புட்னிக் - வி தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
உலகளாவிய கோவிட் தடுப்பூசி வளர்ச்சியின் மற்றொரு படியாக ரஷ்யாவின், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் அளவு 70-80 சதவிகித செயல்திறன் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய மருத்துவத் தரவைத் தொடர்ந்து ஸ்பூட்னிக் வியின் முதல் ஒரு அளவை மாத்திரம் தடுப்பூசியாக பயன்படுத்தப்படலாம் என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான கமலேயா நிறுவனம் இலங்கைக்குத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், கடந்த வாரம் இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆரம்பத்தில் 28 நாட்களில் இரண்டு அளவுகளை செலுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டது, எனினும் சமீபத்திய ஆய்வுகள் முதல் அளவு மாத்திரமே போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்பதை காட்டுகின்றன.
இந்தநிலையில் ஏற்கனவே ஸ்புட்னிக் வி இரண்டு அளவுகள் என்ற , கொள்கை முடிவை மாற்றியமைக்க சமீபத்திய ஆய்வுகளுக்குப் பிறகு வெளிவந்த மருத்துவத் தரவின் பகுப்பாய்வு தேவைப்படும் என்று இலங்கை மருத்தாக்கல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ரஷித விஜயவந்த தெரிவித்துள்ளார்.
"எந்தவொரு முடிவுக்கும் முன்னர் தாங்கள் அத்தகைய தரவுகளைப் படிக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு அளவுகளை வாங்குவதற்காக இலங்கை ஏற்கனவே ரஷ்யாவுடன் வணிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே, 65,000 குப்பிகளை ரஸ்யா இலங்கைக்கு வழங்கியுள்ளது. முன்னதாக, முதல் அளவுக்கு பின்னர் 28 நாட்களில் இரண்டாம் அளவு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது அளவு 90 நாட்கள் வரை தாமதப்படுத்தப்படலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள், என்று விஜயவந்த கூறியுள்ளார்.