முதலமைச்சர் வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய - கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம்.
மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது என நாங்கள் சொல்லியிருக்கின்றோம். மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.

முதலமைச்சர் வேட்பாளர்
எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம்.
யாழ்ப்பாணத்திலோ - வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச்செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.
இதிலே தெளிவான ஒரு நிலைப்பாடு என்னவென்றால் கட்சியோடு தொடர்புடைய - கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri