இலத்திரனியல் வாகனங்கள் இறக்குமதி: மோசடி தொடர்பில் அம்பலமான தகவல்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 1ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது.
இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மோசடி குறித்து தெரியவந்துள்ள விடயம்
இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மோசடி பற்றி தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார்.
இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விலக்கு எல்லை 6 மில்லியன் ரூபாவிலிருந்து 12 மில்லியன் ரூபா வரை உயர்த்தப்பட்டமையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 2.42 பில்லியன் ரூபா என்றும் கணக்காய்வாளர் நாயகம் குழுவில் சுட்டிக்காட்டினார்.

