உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பீட்ரூட் இறக்குமதி! வசமாக சிக்கிய கும்பல்
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் கிழங்கினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, 30 இலட்சம் ரூபா பெறுமதியான 16 ஆயிரம் கிலோ பீட்ரூட் சுங்க மத்திய பொருள் பரிசோதனை பிரிவு அதிகாரிகளினால் கைபற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்துக்கிடமான குளிரூட்டப்பட்ட இரு கொள்கலன்களை பரிசோதனை செய்த போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலன்களில் வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்று 53 ஆயிரம் கிலோ கிராம் உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.