இணைய வசதியின்மையினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசங்களில் இணைய வசதியின்மையினால் மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றினால் பாடசாலை மூடப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் கிராமப்புற மாணவர்கள் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இணைய வழிக்கல்வியைக் கற்பிப்பதற்காகப் பெற்றோர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கையடக்க தொலைபேசிகளை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்தும் மாணவர்கள் வீட்டின் கூரைக்கு மேல் மற்றும் வயல் வெளியை தேடியும், குளக்கட்டைத் தேடியும் சென்று 4ஜீ கவரேஜ் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இணையவழி ஊடாக கற்பிக்கும் சந்தர்ப்பத்தில் இணைய வசதி இல்லாமையினால் ஆசிரியர்கள் சொல்லும் விடயங்கள் மாணவர்களுக்குத் தெரியவில்லை, மாணவர்கள் சொல்லும் விடயங்கள் ஆசிரியர்களுக்கு விளங்குவதில்லை.இதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசங்களில் உள்ள எத்தாபெந்திவெவ, கிராம மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே,மிக விரைவில் இணைய வழிக்கல்வியைத் தொடர மிக விரைவில்
பெற்றுத்தருமாறு மாணவர்களும் ,பெற்றோர்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்
கோரிக்கை விடுத்துள்ளனர்.