அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்லும் முயற்சி - பின்னணியில் செயற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கைது
அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக புலம்பெயரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை படைகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சட்டவிரோதமாக செல்ல மக்களிடமிருந்து 7 மில்லியன் இலங்கை ரூபாய் பணத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் இலங்கை கடற்படை சேர்ந்த ஒருவரும் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு 25 பேருடன் படகு வழியாக செல்லும் முயற்சியினை இலங்கை படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து படகில் இருந்தவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையின் ஆட்கடத்தல், கடல்சார் குற்ற விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
ஆட்கடத்தல் விசாரணை பிரிவு விசாரணை
இந்த விசாரணையில், ஆட்கடத்தலில் தொடர்புடைய சுமார் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விசாரணைக்காக ஆஜாராகும்படி இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களை ஆட்கடத்தல் விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.
சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களுக்கு படகு ஒன்றை வழங்கிய இலங்கை கடற்படையை சேர்ந்த சிப்பாய், இப்படகை பயன்படுத்தினால் நீங்கள் கைது செய்யப்படமாட்டீர்கள் என கூறியதாகவும் கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவை நோக்கிய படகு வழி புலம்பெயர் முயற்சிகளை தடுக்க கண்காணிப்பு கருவிகள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் என்பனவற்றினை அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கி வரும் சூழலில், இலங்கை படைகளை சேர்ந்த இருவர் ஆட்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




