யாழில் சட்டவிரோத முறையில் வாகனம் பறிமுதல்: ஒருவர் கைது
போலியாக தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி வாகனமொன்றை பறிமுதல் செய்த சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக்கு (லீசிங்கில்) டிப்பர் வாகனமொன்றை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். கோப்பாய் வீதியில் டிப்பர் தரித்து நின்ற போது அங்கு வந்த நால்வர் தம்மை பொலிஸார் என கூறியுள்ளதுடன், வாகனத்திற்கு லீசிங் தவணைப் பணம் செலுத்தவில்லை என தெரிவித்து வாகனத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பணம், தொலைபேசி கொள்ளை
இதனையடுத்து தனது வாகனத்திற்குள் தொலைபேசி, 50 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்ததாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் பின் கோப்பாயை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீது சட்டத்துக்கு புறம்பாக வாகனத்தை பறிமுதல் செய்தமை, பணம் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டமை, மோசடியாக தம்மை அறிமுகப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்படுவதாகவும், இது தொடர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.