கண்டாவளை - வெளிகண்டல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை - வெளிகண்டல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தொடர்பில் பார்வையிடப்பட்டுள்ளது.
கண்டாவளை ஆற்றில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் வயல் நிலங்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் காணப்படுகின்ற மணல் தோண்டப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
நேரில் சென்று பார்வையிட்ட குழு
இதனை தடுக்கும் வகையில் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் மற்றும் கடல் தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கடந்த 14ஆம் திகதி இரவு டிப்பர் வாகனம் ஒன்றும், உழவு இயந்திரமும் சிறப்பு அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
அத்துடன் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



