சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இரு இளைஞர்கள் கைது
புதுக்குடியிருப்பு - அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (12.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 418 லீற்றர், கசிப்பு 60 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் சந்தேகநபர்கள்
குறித்த சம்பவத்தில் வட்டுவாகல் பகுதியை சேர்ந்த 22, 19 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்றையதினம் (13.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் (25.03.2025) திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதன் போது தெரிவித்திருந்தார்.

