முல்லைத்தீவில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள்: பொலிஸார் நடவடிக்கை (Photos)
பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத மீன் விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இன்று (19.06.2023) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் நாற்சந்திகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோதமான மீன் விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதுடன் பல்வேறு விபத்து சம்பவங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தன.
சட்டவிரோத வியாபாரம்
இதற்கமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நிந்தவூர் பிரதேச சபை நிந்தவூர் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஒன்றினைந்து இவ்வாறான சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கை இடம்பெறும் இடங்களை இன்று அடையாளப்படுத்தி எச்சரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன், துண்டுப்பிரசுரத்தில் ஏலவே நிந்தவூர் பிரதேச சபை சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கூறி பிரேரணைகளை நிறைவேற்றி கட்டுப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் முறைப்பாடு
இந்நிலையில், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத வியாபாரங்கள் குறிப்பாக மீன் விற்பனை முக்கிய சந்திகளில் சட்டவிரோதமாக அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தற்போது பல்வேறு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, தியேட்டர் வீதி அலியாண்டை சந்தியில் இவ்வாறு எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டதுடன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் ,நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வருமான வரி பரிசோதகர்கள், பொதுச்சந்தை குத்தகைக்காரர் , என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.










