கிளிநொச்சியில் சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை! அகற்ற முற்பட்ட போது அமைதியின்மை (Video)
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில் சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்றுமுன் தினம் (17-11-2022) அவற்றை அழிக்க முற்பட்ட வேளை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
முரண்பாடு
குறித்த நெற்செய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும், சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரணைமடுகுளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் சட்டரீதியற்ற முறையில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இவ்வாறு பயிர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள்
ஆனால் ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை காணப்பட்டதுடன், குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழிநுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.