மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோத கசிப்பு வடிக்கும் இடம் முற்றுகை - ஒருவர் கைது
மன்னார்-மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதோடு, சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொது அமைப்புக்கள், கிராம அலுவலகர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று(10) திங்கட்கிழமை மதியம் இக்கைது இடம்பெற்றுள்ளது.
பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று திங்கட்கிழமை (10) மதியம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது மடு பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்றை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, சகிப்பு வடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மற்றும் 14 லீற்றர் கசிப்பு போன்றவற்றை மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தின் அத்தியட்சகர் எஸ்.செந்தூர் செல்வன், மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எம்.என்.மடிக சேகர, மது வரி நிலைய பரிசோதகர் எம்.பாலதாஸ், மது வரி நிலைய சாஜன் என்.டி.எம்.டில்கான், மது வரி நிலைய உத்தியோகஸ்தர்களான எதிரி வீர, திஸாநாயக்க, ஏ.ஜே.பீரிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட
உள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை
குறிப்பிடத்தக்கது.


திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
