திருகோணமலையில் கட்டிடம் தொடர்பில் முறையற்ற சட்ட நடவடிக்கை.. இளைஞர்கள் போராட்டத்தில்!
இளையோரின் கல்வி, வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற அமைப்பொன்று அதன் கட்டிடம் தொடர்பில் முறையற்ற, சட்ட முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.11.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களால் இன்றையதினம் (24.11.2025) மாநகர சபைக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை வாயிலில் பதாதைகளை ஏந்திய வண்ணம் தங்களுடைய கண்களை கருப்பு துணியால் கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் திறந்த கேள்வி கோரப்பட்ட குத்தகை கேள்விகளின் விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த செயற்பாடுகள் தொடர்பிலும், குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிடத்தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டமை தொடர்பிலும், நகரின் அபிவிருத்தி மற்றும் உரிமை சார் பொதுமக்கள் நம்பிக்கைகளை மீறி, கவனயீமாக செயல்படுவது தொடர்பிலும், கட்டாக் காலி மாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த தவறுவது தொடர்பிலும், திருகோணமலை பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துக்களில் கவனமின்றி செயற்படுவது தொடர்பிலும் இந்தக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 50இற்கும் மேற்பட்ட இளையோர் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். பின்னர் மாநகர சபைக்குள் அமைதியான முறையில் உள்நுழைந்த இளைஞர்கள் மாநகர சபை முதல்வர் மற்றும் மாநகர சபை ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறுகள்
இருந்த போதிலும், காவலாளி, மாநகர சபை ஆணையாளர் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாநகர சபை ஆணையாளர் கலந்துரையாடல் மேற்க்கொள்ள இளைஞர்கள் மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் போது, மாநகர சபையின் உப முதல்வர், மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களும் அங்கு இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் முடிவு எட்டப்படும் என தெரிவித்ததன் அடிப்படையிலும், மாநகர சபையின் நடவடிக்கைகளில் சில தவறுகள் விடப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிட்டு கவனயீர்ப்பை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.
மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நாகர்ஜுன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சபை அமர்வில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





