இனவாதத்தை ஊடகங்களில் கக்கும் உதய கம்மன்பில - சபா குகதாஸ் எச்சரிக்கை
சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என வழமையான பாணியில் இனவாதத்தை ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கக்கியுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (02.08.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
சமஸ்டியே நிரந்தர தீர்வு
தென்னிலங்கையில் குறிக்கப்பட்ட சிங்கள மக்களை தங்கள் பக்கம் திருப்பி தங்கள் நாடாளுமன்ற கதிரைகளை தொடர்ந்தும் சூடாக்க இனவாத கருத்துக்களை கம்மன்பில
உள்ளிட்ட சிலர் பயன்படுத்த முனைவதன் வெளிப்பாடே தமிழர்களின் அபிலாசைகளை,
ஜனநாயக வெளிப்பாடுகளை இனவாதமாக சித்தரித்தல்.
இது 1956 ஆண்டில் இருந்து இன்றுவரை இலங்கையில் தொடர்கிறது. இதன் அறுவடையை 2019 ஆண்டின் பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பாரிய பொருளாதார பின்னடைவாக சந்தித்த கள யதார்த்தம் நாட்டை தொடர்ந்து மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியுள்ளது.
நாடு மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் முடங்கி விட்டது. பிச்சை எடுத்தும் இருக்கும் நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஜனாதிபதி ரணில். இந்த நிலையில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டுவது கம்மன்பிலவின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சிங்களவர்கள் வெளியேறும் நிலை
நாட்டின் இனப்பிரச்சனைக்கு சிங்கள ஆட்சியாளர் நிரந்தர தீர்வாக சமஸ்டியை கொடுக்க தவறினால் இன்னும் சிறிது காலத்தில் அன்று தமிழர்கள் சாரை சாரையாக வெளிநாடுகளுக்கு ஓடியது போல தென்னிலங்கையில் சிங்களவர் வெளியேறுவதை கம்மன்பில பார்ப்பார்.
தமிழ் மக்கள் 1952 ஆண்டில் இருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களது அபிலாசையாக ஜனநாயக ரீதியாக சமஸ்டி தீர்வு வேண்டும் என்றே கூறுகின்றனர். வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாண்மை தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டதை நிராகரிக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியார்களின் எதேச்சதிகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதை வெளிக்காட்டும் குறியீடாக தென்னிலங்கை சிங்களவர்கள் விரைவில் நாட்டை விட்டு ஓடுவார்கள் என குறிப்பிட்டு்ள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |