ரணிலுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டால், பிரதிவாதிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் - மைத்திரிபால சிறிசேன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது, நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டியவில் உள்ள புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கைவிடப்படுமாக இருந்தால், சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பில் சகல பிரதிவாதிகளின் வழக்கு விசாரணைகளும் கைவிடப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வாதத்தை முன்வைத்துள்ளார்.
தமது சட்டத்தரணியின் ஊடாக இந்த வாதம் நேற்று (31.10.2022) முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, நீதிமன்றம் கைவிட தீர்மானித்தால், தனது வாடிக்கையாளருக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு
இது தொடர்பாக முதலாவது பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் அடிப்படையில், பிரதிவாதிகளின் பொறுப்புகள் கூட்டாகவும் பலமாகவும் காணப்படுவதாக அவர் மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழு நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு
இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 33 வழக்குகள் நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவான் தாரக ஹினட்டிகல முன்னிலையில் நேற்று (31.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ட்ரெவர் பெர்னாண்டோ, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தனது கட்சிக்காரர் அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின் பிரகாரம் வழக்கில் இருந்து விடுபடுவதற்கு உரித்துடைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களை தொடர வேண்டாம் என உயர் நீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.