சீனாவிற்கு எதிராக G7 நாடுகள் முன்னெடுக்கும் B3W திட்டம்! - இலங்கையையும் இணைத்துகொள்ள யோசனை
சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சிக்கு சவால் விடுக்கும் வகையில் கைத்தொழில் வளம் மிக்க G7 நாடுகள் மேற்கொள்ளவுள்ள 40 டிரில்லியன் அமெரிக்க டொலர் புதிய உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீடான Build Back Better World (B3W) முயற்சியில் இலங்கையும் இணைந்துக்கொள்வதற்கான யோசனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்புதல் அளித்துள்ளார்.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற நாடுகளுக்கு உதவும் வகையில் அண்மையில் பிரித்தானியாவில் கூடிய G7 தலைவர்களால் B3W என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் WION என்ற ஊடகத்துடன் இடம்பெற்ற பிரத்யேக நேர்காணலில், எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற உதவிகளைப் பெற்றால் செழிப்பு மற்றும் வளர்ச்சியின் மூலம் இலங்கை பயனடையும் என்று தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் வேலைவாய்ப்பு, வளர்ச்சி விகிதம், சீரான வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பொருளாதார குறிகாட்டிகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார, அபிவிருத்தி மற்றும் வர்த்தகத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், இலங்கை ஒரு அபிவிருத்தி பயணத்தை ஆரம்பிக்க இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஊக்குவிப்பை ஏற்படுத்தும்.
இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்ற தற்போதைய சூழலில், மூலதன முதலீட்டின் உட்செலுத்துதல், மானியத் திட்டங்கள், இந்த முயற்சிகளிலிருந்து கிடைக்கக்கூடிய கடன் திட்டங்கள் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் தாம் நினைப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை இப்போது வீழ்ச்சி நிலைக்குச் செல்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், தாம் அப்படி நினைக்கவில்லை. ஆனால் தற்போதைய போக்குகள் மற்றும் பொருளாதாரப் பாதையை ஆராயும்போது, வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகத் தெரியவில்லை.
இது மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீனாவின் பிடியில் மேலும் மூழ்கடிக்கப்படுகிறதா? என்று கேட்கப்பட்டபோது, “வேறு எந்த நாடு அல்லது அரசு சாராத எவருக்கும் அடிபணிவதில் இலங்கையர்கள் ஒருபோதும் ஆர்வம் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இலங்கை அணிசேரா நாடு என்ற வகையில் இந்தியாவுடனான உறவை எவ்வளவு மதிக்கிறோமோ அதேபோல், சீனாவுடனும் உலகின் பிற பகுதிகளுடனான உறவையும் மதிப்பதாக கூறினார்.
இலங்கையின் உள்நாட்டு தேசிய நிகழ்ச்சி நிரல் வெளிப்புற காரணிகளால் தீர்மானிக்கப்படுவதை இப்போது காணமுடிகிறது. இலங்கையர்கள் அதை விரும்பவில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.