தடைகள் இன்றி விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் : மகிந்த அமரவீர (Photos)
தடைகள் இன்றி விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (31.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட போது அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் ''சியாப்'' என்றழைக்கப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் 29 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம், விவசாய சங்கத்தின் உதவியுடன் நாவற்குளம் என்ற குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக அப்பகுதிக்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வித தடங்களும் ஏற்படாதவிடத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வன பாதுகாப்பு திணைக்களம்
கடந்த யுத்த காலத்தின் போது விவசாயம் செய்யப்பட்டு வந்த தமது காணிகளை வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காணியென கூறி எல்லை கற்களை போட்டு வருவதாகவும் இதனால் ரொட்டவெவ-மிரிஸ்வெவ விவசாயிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனை தீர்த்து வைக்குமாறும் விவசாய அமைச்சரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கள விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல. கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ்' சியாப் திட்டத்தின் பிரதி திட்டப்பணிப்பாளர் ஆரியதாஸ, மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் மற்றும் விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.