போர் காலத்தில் இவர்கள் இருந்திருந்தால் எங்களை விடுதலைப்புலிகளின் தலைவர் பிடித்திருப்பார்:- பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியை கைவிட்டு அரசாங்கத்திற்கு தாவும் நபர்கள இருக்கக்கூடும் என்றாலும் தான் அப்படியான கோழைத்தமான வேலைகளை செய்வதில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கோழைத்தனமான முதுகெலும்பில்லாத வேலையை செய்ய மாட்டேன்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக முகநூலில் பதிவுகள் வெளியாகி இருப்பதை பார்த்தேன். கொள்கை அடிப்படையில் சிலவற்றை நான் அங்கீகரிப்பதில்லை என்பதால், பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறும் போதும் நான் அதனை ஏற்க மறுத்தேன்.
இதனால், அப்படியான கோழைத்தனமான முதுகெலும்பில்லாத வேலைகளை நான் செய்ய மாட்டேன். அப்படி செய்பவர்கள் இருக்கலாம். சிலர் பேச்சுவார்த்தைகளையும் நடத்தலாம். நான் எப்போதும் அந்த நிலைமைக்கு செல்ல மாட்டேன்.
நல்ல வேளையாக போர் காலத்தில் இவர்கள் இருக்கவில்லை- இருந்திருந்தால் பிரபாகரன் எங்களை பிடித்துச் சென்றிருப்பார்

அதேவேளை பயங்கரவாதம் இருக்கின்றதா என்பது பற்றி விசாரிக்க அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை தடுத்து வைத்திருப்பதாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த 2 ஆம் திகதி நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நான் ஒழுங்கு செய்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கூறியதாக என்னிடம் கடிதம் ஒன்றை வழங்கினர். இப்படியான வேலைகளையே தற்போதுள்ள புலனாய்வுப்பிரிவினர் செய்கின்றனர்.
நல்ல வேளையாக இவர்கள் போர் நடைபெற்ற காலத்தில் இருக்கவில்லை. போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் போன்றவர்கள் இருந்திருந்தால், பிரபாகரன் வந்து எங்களை பிடித்து சென்று அங்கு தடுப்பு காவல் உத்தரவை வழங்கியிருப்பார்.
வசந்த முதலிகே மற்றும் பிக்கு ஆகியோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். தவறுதலாக அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவையும் பொலிஸ் நிலையத்தையும் மக்கள் தரைமட்டமாக்கி விடுவார்கள்.
அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம்

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதே காப்புறுதியை பெற்றுக்கொண்டு தயாராக இருக்க நேரிடும். எமக்கும் போவதற்கு இடமில்லாமல் போகும் என்பதே இதற்கு காரணம்.
கடந்த காலங்களில் வீடுகள் தீ வைக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒழிந்து வாழ நேரிட்டமை நினைவில் இருக்கலாம். அவற்றை நினைவில் கொண்டு அவற்றின் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் அடிப்படை உரிமை, மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்படும் வரை அரசாங்கத்திற்கு உதவ வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எங்களிடம் ஆதரவு வழங்குமாறு கோருகின்றனர்.
அடிப்படை உரிமை, மனித உரிமை மீறப்படுவது நிறுத்தப்பட்டு அவற்றுக்கு மதிப்பளிக்கப்படும் போது நாங்கள் ஆதரவு வழங்குவோம். இந்த விடயங்களை நிறைவேற்றும் வரை ஒரு டொலர் பணத்தை கூட இந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டாம் என நான் உலக நாடுகளில் வாழும் மக்களிடம் கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan