நாட்டில் ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குவேன்: சஜித் பிரேமதாச
ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்குவேன் என எதிர்க்கடசி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்காகவும் இன்று வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களுக்கு மேல் இயங்கிய சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மூடப்பட்டுள்ளது.
டொலர் இல்லை என்கின்றனர். எனினும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்ய இவர்களிடம் டொலர் காணப்படுகின்றது. அவசரமாக, ஊழல் முறையின் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் தரகுப் பணத்தின் மூலமே இயங்குகிறது. இந்த நாட்டை பொறுப்பேற்று, புதிய யுகத்தின் ஊடாக பயணிப்பதற்குத் தயாராகுங்கள். ராஜபக்ச குடும்ப அரசு வீட்டுக்குச் செல்லும் வரை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும். ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்குவேன்.
நாம் தகுதியின் அடிப்படையில் பதவிகளை வழங்கி நாட்டை வெற்றிபெறச்
செய்வோம். 220 இலட்சம் மக்களின் இந்த அன்னை பூமியை நாம் மீட்டெடுப்போம்.
வீழ்ந்து கிடக்கும் இந்த தேசத்தை நாம் மீட்போம் எனத் தெரிவித்துள்ளார்.



