ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி பதவி எனக்கே கிடைத்திருக்க வேண்டும் - ஜோன் அமரதுங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கே கிடைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜோன் அமரதுங்க கடும் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவதா இல்லையா என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் முன்னுரிமை தருவதாக கூறி சஜித் பிரேமதாச அழைத்த நேரத்தில் அதனை ஏற்றுக்கொள்ளாது, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததாகவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பட்டியலில் முதலில் தனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை கவனத்தில் கொள்ளாது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம் தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில்லை என்ற கொள்கையை மீறியுள்ளதாகவும் அமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையாத தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் தேசிய பட்டியலில் தனது பெயரை சேர்த்திருக்காவிட்டால், தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.