பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து.. வெளியான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு
நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த அதிர்ச்சிச் சம்பவத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் மொன்றியலில் இருந்து 76 பேருடன் வந்த Jazz Aviation நிறுவனத்திற்குச் சொந்தமான Flight 8646 (CRJ-900) விமானம், லாகார்டியா விமான நிலையத்தின் 4ஆவது ஓடுபாதையில் தரையிறங்கியபோது, அங்கு குறுக்காக வந்த போர்ட் அத்தாரிட்டி பொலிஸாருக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது.
உடனே நிறுத்துங்கள்...
விமான நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளில், ஓடுபாதைகளின் சந்திப்பில் விமானமும் வாகனமும் அதிவேகமாக மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தில் தீயணைப்பு வாகனம் பலமுறை உருண்டு கவிழ்ந்தது. அதேவேளை, விமானம் புகையை கக்கியபடி ஓடுபாதையில் இழுத்துச் செல்லப்பட்டது.
விபத்து நடப்பதற்குச் சற்று முன்னதாக, இரவு 11:38 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (Air Traffic Controller) தீயணைப்பு வாகனத்தை நிறுத்தும்படி சத்தமிட்டுள்ளார்.
அதிகாரியின் தவறு
"நில்லுங்கள், டிரக் 1 நில்லுங்கள்! உடனே நில்லுங்கள்!" என அவர் பலமுறை கத்திய சத்தம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி கேட்டுள்ளது.

விபத்து நடந்த பின்னர் சக அதிகாரி ஒருவரிடம் பேசிய குறித்த கட்டுப்பாட்டாளர், "ஆமாம், நான் பார்த்தேன். நான் இங்கேதான் இருந்தேன். ஏற்கனவே ஒரு அவசரச் சூழலைக் கையாண்டு கொண்டிருந்தோம். நான் பெரிய தவறு செய்துவிட்டேன் (I messed up)" என தழுதழுத்த குரலில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தின் போது, விமானம் மணிக்கு சுமார் 24 மைல் (39 கி.மீ) வேகத்தில் பயணித்ததாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 4 ஊழியர்கள் உட்பட மொத்தம் 76 பேர் இருந்துள்ளனர்.
ட்ரம்ப் - கார்னி கருத்து
1992ஆம் ஆண்டிற்குப் பிறகு லாகார்டியா விமான நிலையத்தில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், "இது ஒரு பயங்கரமான விபத்து. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். இது மிகவும் ஆபத்தான தொழில்," எனக் குறிப்பிட்டார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, விபத்து குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கனேடிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க மற்றும் கனடா நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையினர் இந்த விபத்து தொடர்பாக முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri