ஓமான் மனித கடத்தலில் ஈடுபட்ட அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து
இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அனுப்பி, பின்னர் மனித கடத்தல் மோசடியில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை வந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சம்மந்தப்பட்ட அதிகாரி இலங்கை திரும்பிய உடன் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்கையில், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி ஓமானில் நடத்தப்படும் பாரிய மனித கடத்தல் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் அம்பலப்படுத்தியது.
மனித கடத்தல்
ஓமானில் இலங்கைப் பெண்கள் பல்வேறு தவறான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், மனித கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோனின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி ஓமான் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
ஒக்டோபர் 09ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்த விசாரணைக் குழுவினர், ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 45 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இதன்போது, சுற்றுலா வீசாவில் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பெண்கள் தாங்கள் பணி புரிந்த வீட்டை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர்.
அவர்கள் பணிபுரிந்த வீடுகளின் உரிமையாளர்களான சுல்தான்களிடம் அவர்களின் கடவுச்சீட்டுக்ள் காணப்படுவதால் அவர்கள் இலங்கை திரும்ப முடியாமல் குறித்த இல்லத்தில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அளவுக்கதிகமான வேலை காரணமாக குறித்த 45 பேரில் 6 பெண்கள் தாம் பணி புரிந்த வீடுகளிலிருந்து தப்பி வந்துள்ளமை தெரிவந்துள்ளது. மேலும் 8 பேர், எல்லை விதிமுறைகளை மீறி துபாயிலிருந்து ஓமானுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தவறான தொழில் நடவடிக்கையில் இலங்கை பெண்கள்
மற்றுமொரு பெண் அந்நாட்டில் தவறான தொழில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் உள்ள முகவர் நிறுவனத்திற்கான, ஓமானில் உள்ள பிரதிநிதி பெண் ஒருவரால் குறித்த பெண் தவறான தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பெண்கள் ஏலத்திற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு அந்நாட்டு எஜமான்களான சுல்தான்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 22 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அங்கு உள்ளதாகவும், இளம் பெண்கள் ரூ. 10 இலட்சம் முதல் சுமார் ரூ. 25 இலட்சம் வரையான தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறு வந்த பெண்ணொருவர் ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓமானில் உள்ள அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள குடிவரவு அதிகாரிகள் குழு இந்த வலையமைப்பை நடத்துவதாக தெரியவந்துள்ளது.