எரிபொருள் சேமிப்பினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய நிதி நட்டம்
எரிபொருளை உரிய தரநிலைகளின்றி சேமித்ததன் காரணமாக 30 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரிகளின் தூரநோக்கற்ற முடிவுகள் மற்றும் ஊழல் செயல்பாடுகளின் காரணமாக இந்த நிதி இழப்பை பொதுமக்கள் தான் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சாதாரண டீசல் விலையை வெறும் 2 ரூபாவினால் மட்டுமே அரசாங்கம் குறைத்துள்ளது எனவும் பொதுமக்களை “ஏமாற்றும் செயல்” எனவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சுமார் 29,963 மெட்ரிக் டொன் பெட்ரோல் 8 முதல் 15 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் பொருத்தமற்ற வகையில் சட்ட விதிகளுக்கு புறம்பாக சேமித்து வைக்கப்பட்டதன் காரணமாக, 600 மெட்ரிக் டொன்களுக்கு மேற்பட்ட பெட்ரோல் ஆவியாகி வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆவியாகிய எரிபொருளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபா எனவும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அழிவுக்கு, ஜனாதிபதி நியமித்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரே நேரடியாக பொறுப்பாளர்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், டீசலை முறையாக சேமிக்கப்படவில்லை எனவும் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவசர கொள்முதல் நடவடிக்கைகள் காரணமாக தற்போது வங்கிகளுக்கு 2 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட கடன் தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களின் இத்தகைய ஊழல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் டொலரின் மதிப்பை 294 ரூபா என்ற அளவில் நிலைநிறுத்த முயன்ற போதிலும், இந்த முறைகேடுகளின் காரணமாக இன்று டொலரின் மதிப்பு 313 ரூபா வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தரமற்ற முறையில் எரிபொருளை சேமித்து பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்ததற்கு எதிராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார்.