விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்யுமாறு கூறிய தமிழரசுக் கட்சி.. ஈழத் தமிழ் முன்னணியின் விமர்சனம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கொல்லுமாறு கூறிய தமிழரசுக் கட்சி இந்த மண்ணில் இருக்கக் கூடாது என ஈழத் தமிழர் முன்னணிக் கட்சியின் தலைவர் எஸ்.ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரானில் நேற்று (23.11.2025) நடைபெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
“விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்தால் தான் நீங்கள் உயிருடன் இருக்கலாம் எனக் கூறிய சம்பந்தனின் கட்சியான தமிழரசுக் கட்சி, இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அதற்கு என்னுடைய உயிர் இருக்கும் வரை விடமாட்டேன்.
நயவஞ்சகர்கள் கூட்டம்
இரா.சாணக்கியன், சுமந்திரன் போன்றோர் கட்சியில் இருந்து விரட்டப்பட்டு தேசியம் சார்ந்தவர்கள், இந்தக் கட்சியை எடுத்து நடத்த வேண்டும். இந்த நயவஞ்சகர்கள் கூட்டத்தை இந்த மண்ணில் இருந்து விரட்ட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் அழிந்து போக வேண்டும் என அப்போது இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தொலைபேசியை நிறுத்திவிட்டு ஒடி ஒழிந்தனர்.

இப்போது வெள்ளை வேட்டியை போட்டுக் கொண்டு திரிகிற இவர்கள் தேவைதானா? எனவே, எங்கள் கட்சி, இந்தத் தமிழரசுக் கட்சியை அழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |